ஆபுத்திரன். பரமக்குடிக்கு அருகிலிருக்கும் ஒரு தனியார்ப் பள்ளிக்கு மாற்றலாகி தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆகிறது.
இவனின் உண்மையான பெயர் வேறு. ஆனால் ஆபுத்திரன் என்கிற பெயரை அவன் விரும்பி தனக்கு தானே வைத்துக்கொண்டான்.
ஒரு சில நெருங்கிய வட்டங்களைத் தவிர வேறு யாரும் அவனை ஆபுத்திரன் என்று அறிந்திருக்கவில்லை. மணிமேகலை காப்பியத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் தான் இந்த ஆபுத்திரன் (ஆ + புத்திரன் = பசுவிடம் பிறந்தவன். அதாவது வழக்கத்திற்கு மாறான பிறப்புடையவன் என்றும் அர்த்தமாகிறது.) அது மட்டுமல்லாமல் மணிமேகலைக்கு முன்னதாக ஆபுத்திரன் கையில் தான் முதன்முதலில் 'அமுதசுரபி' இருந்தது. வானவர் தலைவன் இந்திரன், ஆபுத்திரன் மீது கொண்ட பொறாமையின் காரணமாக, 'இனி உலகத்தில் மழைபெய்து யாவரும் பசியின்றி போகக்கடவது”, என்று சொல்லிவிட்டபடியால் அமுதசுரபியை நாடுவோர் யாரும் இல்லாமல் போயினர்.
சமூகத்திற்கு, தான் கொண்டுள்ள அமுதசுரபியினால், இனி, எவ்வித தேவையும் இல்லை என்கிற பட்சத்தில் அதைக் கடலில் எறிந்துவிட்டு ஆபுத்திரன் வடக்கிருந்து உயிர்துறந்துவிடுகிறான். அதாவது சமூகத்திற்குப் பயனில்லாது போகும்போது தான் உயிர்வாழ்வதில் பொருளில்லை என்று அவன் மறித்துப்போகிறான். இந்த ஒரு காரணத்திற்காகத்தான் இவனும் தன் பெயரை ஆபுத்திரன் என வைத்துக்கொண்டான்.
மாலை நேரம்;. குளிர்ந்த காற்று மெல்லிய விசில் சத்தத்துடன் அலை அலையாய், மொட்டை மாடியில் நின்றுகொண்டிருந்த அவனைக் கடந்துகொண்டிருந்தது. மழைபெய்வதற்கான அறிகுறியாகக் கரிசல் மண்ணின் வாசனை காற்றின் ஒவ்வொரு கடந்துபோகுதலிலும் அவன் நாசியில் உரசிற்று. ஒவ்வொருமுறையும் அந்த வாசனையை உள்ளிழுத்துவிடும் விதமாகப் பெருமூச்சொன்றை அவ்வப்போது ஆழமாய் இழுத்துவிட்டுக்கொண்டான். சுவரை ஒட்டியிருந்த கயிற்றுக்கட்டிலை வாஞ்சையாய் திரும்பிப் பார்த்தான்.; கட்டிலில் கலைந்து கிடந்த போர்வைக்குள் அவன் உடம்பின் வாசனை அடர்த்தியாய் ஏறியிருந்தது. கட்டிலின் கயிறு, தொட்டில் கணக்காய் தொய்வடைந்திருப்பது அவனுக்குச் சுகமாக இருந்தது. அதில் அவன் தனியாக வானத்தைப் பார்த்தவாறு படுத்துக் கிடந்தான். ஊர் மாறி வரும்போது குடும்பத்தை தன்னோடு அழைத்துவந்திருக்கவில்லை. ஒரு சில மாதங்கள் கழித்து அழைத்துவரலாம் என்று நினைத்திருந்தான்.
புதிய ஊர். புதிய பள்ளி. புதிய ஆசிரியர்கள். புதிய மாணவர்;கள் - இவை எல்லாவற்றையும் சிந்தித்தவாறே படுத்துக் கிடந்தான். அமைதியாய் இருந்தது, மேகங்கள் நிறைந்திருந்த வானம். மேகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வடிவங்களைக் கொண்டு வானம் முழுவதும் படர்ந்து கிடந்தன.
ஒவ்வொரு மேகவடிவங்களையும் படித்தவாறு படுத்துக் கிடந்தான். தொலைவில் ஒரு பெண் நாயொன்று இடையிடையே குரைத்துக்கொண்டிருந்தது. நாயின் குரைப்பு பல்வேறு கற்பனை உருவங்களாய் படர்ந்து கிடந்த மேகங்களை, காற்றின் ஊடாக சிதறடித்துக் கொண்டிருந்தது.
முதலில் அந்த நாயின் குரைத்தலை அவ்வளவாக அவன் கவனித்திருக்கவில்லை. அவன் மேகங்களை ஆர்வமாய் படித்துக்கொண்டிருந்தான். ஒரு மேகக் கூட்டம், பத்து தலைகள் கொண்டு, பார்ப்பதற்கு இராவணனைப்போல் காட்சியளித்தது. அதோடு மட்டுமல்லாமல் அந்த மேகக் கூட்டம், தன் பத்து தலைகளும் காற்றில் பிரிந்து உருண்டோட அவற்றை மீண்டும் பொறுக்கி, அவன் அவைகளைத் தன் தலையில் பொருத்திக்கொள்ளும் தோற்றத்தில் இருந்தது. அதை ஆபுத்திரன் உன்னிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் விடாமல் இடையிடையே குரைத்த கொண்டிருந்த அந்த நாயின் எரிச்சல் கொண்ட குரைத்தலைக் கவனித்தான்.
எழுந்து வந்து மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி மாலைநேர இருளுக்குள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் அந்த பெண் நாயின் குரைத்தல் வந்த திசையில் உற்றுநோக்கி நாயைத் தேடினான்.
காற்றில் கலந்த புழுதியின் ஊடாக அந்த நாயின் குரைத்தல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த குரைத்தல் ஒருவித எரிச்சல் தன்மையுடன் இருந்ததாய் அவனுக்குப்பட்டது. அவன் பதற்றமானான். எங்கிருந்து வருகிறது இந்த குரைத்தல் என்று இன்னும் ஆழமாகக் கண்களைக் கூர்மைப்படுத்திப் பார்த்தான். மாலைநேர இருள் மெல்லக் கவிழ்ந்துகொண்டிருந்தது. தொலைவில் நின்ற ஒரு வேப்பமரத்தினடியில் கறுப்பாய் ஒரு நிழல் நகர்ந்துகொண்டிருந்தது. அந்த நாய், அவன் கண்ணில் பட்டது. அதுவொரு கறுப்பு நிற பெண் நாய். அந்த நாயைச் சுற்றி நான்கைந்து ஆண் நாய்கள் நின்றுகொண்டிருந்தன. அவைகள், அவளைப் புணர்வதற்காகச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தன. அந்த பெண் நாய் களைப்படைந்திருந்தது. அருகில் நெருங்கிய ஒவ்வொரு ஆண் நாயையும் குரைத்துத் துரத்தியவாறே இருந்தது. எவ்வளவு நேரம் இவ்வாறு குரைத்துக் குரைத்துத் துரத்திக்கொண்டிருந்ததோ தெரியவில்லை. குரைத்துக் குரைத்து... துரத்தித் துரத்தி .. விரட்டி விரட்டி ஓய்ந்துபோயிருந்தது, அதன் குரலில், உடலசைவில் நன்றாகவே தெரிந்தது. சுற்றியிருந்த ஆண் நாய்களும், ஒன்றன்பின் ஒன்றாய் விடாது அவளை முயன்றபடி இருந்தன.
அவனுள் மெல்ல ஒரு வேதனையின் கோடு தடித்துக்கொண்டே போவதாய் அவன் உணர்;ந்தான். கீழே இறங்கிப் போய் ஆண் நாய்கள் அனைத்தையும் ஓட ஓட அடித்து விரட்டி விட வேண்டும்போல் இருந்தது. ஆனால், சுற்றியிருந்த வீடுகளில் இருப்பவர்கள் அவனைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? எனத் தயங்கினான்.
அந்த பெண் நாய் உண்மையிலேயே துவண்டுபோயிருந்தது. இவனும் அயர்ந்துபோய் கட்டிலில் வந்து படுத்தான். மீண்டும் அந்த நாய் குரைக்கும் போதெல்லாம் ஓடிப்போய் கைப்பிடிச் சுவரை இருக்கப் பற்றிக்கொண்டு அந்த நாயைத் தேடினான். எதுவும் செய்ய இயலா வேதனையில் படுக்கைக்கும் கைப்பிடிச்சுவருக்குமிடையே ஓடுவதும் பின் படுப்பதும், பின் ஓடுவதும், எனக் கிடந்தான்.
இருள் மெல்ல அடர்த்தியாகிக் கொண்டே போனது. நாயின்; ஓலம் மட்டும் இன்னும்;; நின்றபாடில்லை. திடீரென 'வீல்' என ஒரு நாயின் குரல். ஓடிப் போய் பார்த்தான். அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பையன்களிலிருந்து ஒருவன், எரிச்சல் அடைந்தவனாய் கற்களைப் பொறுக்கி ஒவ்வொரு ஆண் நாயையும் குறிவைத்து அடித்துக்கொண்டிருந்தான். எல்லா ஆண் நாய்களும் சிதறி ஓடிக்கொண்டிருந்தன.
அந்த பெண் நாயைத் தேடினான் இவன். புதிதாய் கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு வீட்டின் திண்ணைக்கு அடியில் ஒண்டிக் கிடந்தது அந்த பெண் நாய். எல்லா ஆண் நாய்களும் ஓடிவிட்ட நிலையில் கால்களை மெல்ல நீட்டிப் படுத்தது.
நாயை விரட்டிய அந்த பையனைத் தேடினான். அவன் அதோ அந்த பாதையில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான். அவனுக்கு முன்பாக வயசு பெண்ணொருத்தி இவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்து முறைத்தவாறும், வாயில் முணுமுணுத்துத் திட்டியவாறும் சென்றுகொண்டிருந்தாள்.
அவர்கள் இருவரும் கண்ணிலிருந்து மறையும் வரை அவன் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

No comments:
Post a Comment