Tuesday, September 21, 2021

நினைவில் காடுள்ள மிருகம்

 

காலம்: கி.பி 1895களின் பிற்பகுதி
இடம்: வேட்டுவப்பட்டி, பருமலைக்காடு, விருதுபட்டி ஜில்லா


அது ஒரு மழைக்கான காலம். தூக்கத்திலிருந்து அலறி எழுந்து உட்கார்ந்த பிச்சைகனி, படுக்கையில் இருக்க மனம் ஒப்பாதவராய் கையை ஊன்றி எழுந்து மெதுவாய் குடிசையின் முன்பகுதிக்கு வந்தவாறே தோளிலிருந்த துண்டால் முகத்தை துடைத்துகொண்டார். தோளின்  அங்கமாக மாறிபோன நைந்த துண்டின் சிக்குவாடை, தூக்கத்தை கொஞ்சம் துடைத்தது. வாசலுக்கு முன்பாக வந்து நின்றவர், உடலை கொஞ்சம் வளைத்தபடி உள்ளங்கையை கண்களுக்கு மேல் அரைவட்டத்தில் குவித்து கரிசக்காட்டை பார்த்தார். இருள் இன்னும் முற்றிலுமாக விலகியிருக்கவில்லை.  இந்தமுறை கண்களை கொஞ்சம் நிதானிக்கச்செய்து மீண்டுமாக உற்று பார்த்தார். தூக்கத்திலிருந்து நிதானமின்றி எழுந்திருந்ததால் கண்களில் இன்னமும் இருள்கட்டி கிடந்தது.
வீட்டின் பின்பகுதியிலிருந்த பருத்திப்படப்புக்கு அருகே முந்தானையை விரித்து படுத்துகிடந்த முத்தம்மாள் தலையை அள்ளிச் செறுகியபடி, 
'இப்படி விடியக் கருக்கல எழுந்து அங்கென்னத்த பார்த்திட்டிருக்கீங்க?';. 
பிச்சைக்கனி கொஞ்சமும் அவளைக் காதில் வாங்கியதாய் தெரியவில்லை. கட்டி கட்டியாய் திரண்டிருந்த கரிசமண்னைப் பார்த்தபடி, 'உழவுபோட்டு நாலு நாளாவது இன்னும் மழைகூடி வராம கிடக்கு...' என்று சலிப்புடன் முணுமுணுத்துக்கொண்டே குடிசைக்கு வெளியே முற்றத்திலிருந்த வேப்பமரத்தடிக்கு வந்து குத்தவைத்து திடமாய் உட்கார்ந்தார்.
கரிசக்காட்டை பார்த்தபடியே, 'ஏலேய்;, மந்தையா,' என மகனை அழைத்தார். 
'காட்டு பக்கம் போயிருக்கான், வந்துருவான்.' என இடைமறித்தாள் முத்தம்மாள். 
கருப்பு மண்கட்டிகள் மல்லாந்து வானத்தை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. காலங்காலமாக வானம் பார்த்த விவசாயம் தான் கரிசக்கார குடியானவர்களின் பூர்வஜென்ம புண்ணியமாய் போனது. கைக்குத்தல் அரிசியும், அவலும், சோளமும், கம்பும், கேழ்வரகும், குதிரைவாலியும் தான் கரிசல் மக்களின் வாழ்வாரத்திற்கு அட்சதை போட்டுகொண்டிருக்கின்றன. கரிசக்காட்டை பொதுவாகவே பருத்திக்காடு என்று சொல்லுமளவிற்கு பருத்தி விளைச்சலும் பிராதன தொழிலாக இருந்தது.

சாமிய வேண்டியபடி ஆட்டுபட்டி பக்கம் வேலையை கவனிக்க கிளம்பினார் பிச்சைக்கனி. வேட்டுவப்பட்டியில் நடந்தேறிய கோர சம்பவத்திற்கு பிறகு தரையில் விழுந்து சிதறிய மண்பானை சில்லுகளென நொறுங்கிய பிச்சைக்கனியும் இன்னும் சில குடும்பங்களும் பருமலைக்காட்டிற்கு குடும்பத்தோடு ஒருசேர வந்து குடியேறிவிட்டிருந்தனர்.

வேட்டுவப்பட்டியில் அன்றையத் தினம் நிகழ்ந்த கொடுமைகள் அவ்வப்போது மண்டைக்குள் ஒரு கொடும் நினைவின் நிழற்படமாய் சிதறி தறிகெட்டு ஓடியபடியே இருந்தன. நினைவினுள் பரந்து விரிந்த காடொன்றில்  வகைதொகைதெரியாமல் வளர்ந்த மிருகம் ஒன்று திசையறியாது கிடைத்ததையெல்லாம் வேட்டையாடித் திரிந்தது. சிலசமயம், மிருகம் வெவ்வேறு உருவம் கொண்டு வேட்டையை நடத்தும். திடீரென தனித்தோ, கூட்டம் சேர்த்தோ அதன் கோரவேட்டை விரியும். அதன் நீண்டநெடிய ஊளைச் சத்தம் மண்டைக்குள் கேட்டபடியே இருக்கும். நினைவுத் தெளிந்து திரும்பியபோதெல்லாம், 'மனசன் செத்து நாளாச்சு', என்று தனக்கு தானே புலம்பிக் கொள்வார் பிச்சைக்கனி.

இன்றும் அக்கொடும் நிகழ்வு அவரின் மண்டைக்குள் ஒரு நிழற்படமாய் ஓட ஆரம்பித்தது. ஈட்டிகள், தடிகள், கோடரிகள் என வேட்டுப்பட்டிக்குள் புகுந்த அரக்க கும்பல் கண்மூடித்தனமாக அங்கிருந்த சனங்களைத் தாக்கியது. கண்ணுக்கு தெரிந்தவரையிலான குடிசைகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. குடியிருப்புகளிலிருந்து நெருப்பிற்கு தப்பி வெளியே ஓடிவந்தவர்களையும் மறுபடியும் நெருப்பில் தள்ளியது வெறிப்பிடித்திருந்த கும்பல். அதைச் செய்தவர்கள் அனைவருமே மனிதர்கள் என்பதை பிச்சைக்கனியால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்பதைவிட அந்நிகழ்வு மனிதர்கள் மீதான பெரியக் குழப்பதையும் கேள்வியையும் ஏற்படுத்திவிட்டது. அந்த கலவரத்தில் ஏறக்குறைய இருபத்திரண்டு பேர் கொல்லப்பட்டனர். கலவரத்திற்கு மறுநாள் வந்த மெட்ராஸ் மெயில் நாளிதழ் ஒரு பச்சிளம் குழந்தை கொடுரமான முறையில் தாக்கப்பட்டு தலைநசுங்கி இறந்திருந்ததை செய்தியாக போட்டிருந்ததாக படிக்க தெரிந்த சிலர் பேசிக்கொண்டிருந்தபோது தான், ஊரைக் காலிசெய்துவிட்டு கிளம்புவது எனப் பிச்கைக்கனி முடிவெடுத்தார். பின்னாளில் பிரிட்டிஷ் போலிசாரின் தலையீட்டால் ஊர் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கலவரம் ஏற்படுத்திய ரணம் அவரை மீண்டும் ஊருக்கு திரும்பவிடாமல் செய்துவிட்டிருந்தது. 
பருமலைக்காட்டிற்கு குடியேறி ஏறக்குறைய ஆறேழு வருடங்கள் ஆயிற்று. மந்தையனை முதுகில் அள்ளிப்போட்டு சாரத்தைக்கொண்டு அவனை இறுக்கி கட்டியபடி 'வெங்கு வெங்கு', என்று நடந்தே பருமலைக்காடு வந்துசேர்ந்தது இன்னும் பச்சையாய் மனதில் அப்பிக்கிடந்தது. 

இதோ, மந்தையன் செம்மறியாட்டு கிடாக்கனக்காக வளர்ந்துகிட்டுவரான். ஆடு மேய்க்க கரிசகாட்டுக்குள் கூடவே சுற்றித்திரிகிறான். அரைக்கோவணத்தை அறுநாக்கொடியில் செருகிவிட்டு கரிசபுழுதியில் பயலுவலோடு முரட்டுத்தனமாய் விளையாடிக்கொண்டிருக்கிறவனுக்கு இன்னமும் தெரியாது தான் பிறந்த ஊர் வேட்டுவப்பட்டி என்று. தம் சாதிசனம் வேட்டுவப்பட்டியில், கொடியத் தூக்கினா கொடிக்கு ஆயிரம், கிளையத் தூக்கினா கிளைக்கு ஆயிரமென, அருக வேராட்டம் பரந்துபட்டு கிடக்குது என்று மந்தையனிடம் சொல்லவே பயந்தார் பிச்சைக்கனி. 'வேட்டுவப்பட்டிக்கு போகலாம்' என அவன் சொல்லிவிட்டால் என்னச்செய்ய? மறுபடியும் அந்த ஊருக்கு செல்வது என்பதை முற்றிலுமாகவே மறந்துவிட்டிருந்தார் பிச்சைக்கனி. காலம் அவரை, 'ஊரையிழந்த மனுசனும் அவன் புள்ளையும்' என்னும் கதையாய் சுருக்கிவிட்டிருந்தது.

எங்க இந்த மந்தையனை இன்னும் காணோம்?
 
'நான் காட்டுக்கு ஆடுகள பத்திகிட்டு கிழக்காம போறேன். மந்தையன் வந்தா சாப்பாட்ட கொடுத்து அனுப்பு', என்றபடி கிளிம்பினார் பிச்சைக்கனி.

'ஆங். ஆகட்டும்', என்ற முத்தம்மாள் அவர் போகிறதை வீட்டின் பக்கவாட்டில் வந்து நின்று பார்த்தபடி, மௌனமாய் அழுதுகொண்டிருந்தாள். கரிசகாட்டில் மைனாக்கள் மஞ்சள் மூக்குகளை ஆட்டி அவளுக்காய் கத்தி தீர்த்தன. மூளிவானம் இன்னும் மனம் திறக்காமல் வெயிலை கொஞ்சம் கொஞ்சமாக கரிசக்காட்டில் பரப்பி வைக்க ஆரம்பித்திருந்தது.

முத்தம்மா, பிச்கைக்கனிக்கு வாக்கப்பட்டு, வந்த நாள் முதல் அவனுக்கு பெரிய பலமாகத்தான் இருக்கிறாள். அவனின் எண்ணங்களை அவனுக்குள் உதிக்கும் முன்பே, அறிந்தவள் முத்தம்மாள். கிழக்கே சூரியன் மேலெழும்புவதற்கு முன்பாகவே விடிந்துவிடும் விடியலென அவன் நினைப்புக்களை கணித்துவிடுகிற விசயம் வேட்டுபட்டி கலவரத்திற்கு பின்பாக இன்னும் அதிகமாகிப்போனது. பருமலைக்காட்டிற்கு குடிவந்தபிறகு அவனை அவள் இன்னும் நெருக்கமாக கவனிக்கத் தொடங்கியிருந்தாள். வாட்ட சாட்டமான மனுஷன் எப்படியோ என்று ஆகிப்போயிருந்தான்.

வேட்டுவப்பட்டியில் இருக்கிற வரைக்கும் எதையும் கூறோடு கையாளுகிற ஆளு. ஊருக்குள்ள கடிதாசி எழுதனுமா இவரை தான் தேடுவாக. ஒரு பிரச்சனைக்கு தீர்வுனா பிச்சைக்கனிதானு ஊருக்குள்ள மரியாதைக்கு குறைவில்லை.
அந்த இரவு கலவரத்தில மொத்தமாக தன்னையே தொலைச்சிட்டு நிற்கிறாரு. கையில் கிடந்த பிஞ்சு குழந்தை மந்தையனை கலவரத்துல பலிகொடுத்த வேதனை அடிவயித்துல ரணமா தங்கி போச்சு. கையில இருந்து கதற கதற பிடுங்கிட்டு போனாங்க. 

எங்குலச்சாமி.. மந்தையானு நானும் அவரும் கதறினோம். 
அடுத்தநாள் ஊருக்கு வெளிய.. பிள்ளை தலைநசுங்கி கிடந்தது. ஆனாலும் பிள்ளைய முதுகுல தூக்கிபோட்டு சாரத்தால இறுக்கி கட்டிகிட்டு "இந்த ஊர்ல இருக்கவேண்டாம் வா முத்தம்மானு" பருமலைகாடுக்கு வந்தோம்.

வந்த நாள் முதல் மந்தையனை அலைச்சிகிட்டு காடுகரையெல்லாம் ஆடுமேய்க்க போறதா நினைச்சிகிட்டே மனுஷன் அலையுறாரு. 'பிள்ளையை கொன்னுடாங்கனு.. சொல்லமுடியாம....' 'இந்த கொடுமையை அவருக்கு எப்படி புரிய வைப்பேன்.' கண்களில் தாரைத்தாரையாக கண்ணீர் வழிய அவன் மறையும் வரை நின்றிருந்தாள். மஞ்சள் மூக்கு மைனாக்காள் "வீச் வீச்" என்று அலறியவாறே இருந்தன.

மெல்ல சூரியன் அந்தநாளை முடித்துக்கொண்டு பிச்சைக்கனியோடு வீடு திரும்பியது. மந்தையன் மதிய சாப்பாட கொடுத்துட்டு சாப்பிடாமலேயே வந்துட்டான். 'எங்க அவன்?' 'சாப்பிட்டானா?' இளவட்டபய... இப்படி சாப்பிடாம திரிஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆவுறது?' என்று அவராகவே பேசிக்கொண்டு குளிக்க போனார். முத்தம்மா, மேஞ்சு திரிஞ்சு கூடு அடைய வந்த கோழிகளை அடைச்சபடி இருந்தாள். 

தீடீரென.. 

'அய்யோ புள்ள போச்சே', என்ற அலறல்.

என்னாச்சு.. எய்யா.. சாமி? என்று பதறியபடி ஓடிவந்தாள் முத்தம்மா.
கீழே கிடந்த பிச்சைக்கனியை அக்கம்பக்கத்து கூப்பிட்டு தூக்கிவந்த சுவற்றோரத்திலிருந்த கயித்துகட்டிலில் கிடத்தினாள். 'மந்தையன் வருவான்... வருவான்', என்று முணுமுணுத்தபடி கிடந்தார். அவ்வப்போது அதிர்ந்து, 'மந்தையா' என்று கத்தி அழைத்தபடியே இருந்தார். 'மந்தையா' என்னும் அவருடைய அழைக்குரல் கரிசக்காட்டில் போகுற தூரம் வரைக்கும் போய் பல வருடங்களுக்குத் திரும்பாமலே போனது.

மீண்டும் அவரின் நினைவு முழுவதும் கலவரம். மீண்டும் பெரும் மிருகமொன்று ஈட்டிகள், தடிகள், கோடரிகள் கொண்டு வேட்டையாடியது. காடு முழுவதும் அலைந்து திரிந்த மிருகத்திடமிருந்து தப்பித்து ஓடியபடியே இருக்கவேண்டியதாயிற்று.

'மந்தையா, மந்தையா' எனும் முனகல் மெல்ல ஓயத்தொடங்கியது. தூரத்தில் காற்றுவாக்கில் அலைந்த ஒரு கும்மிப்பாடலை முணுமுணுத்தபடி ஆசுவாச பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டார். கண்களின் ஓரத்தில் நீர்த்திவலைகள் துளிர்த்து நின்றன. அந்நீர்த் திவலைகளை நினைவுகளில் விரியும் காட்டில் அலைந்துதிரிகிற அப்பெரிய மிருகம் வந்து அருந்திபோனது. பிச்சைக்கனியும் மந்தையனும் நினைவில் காடுள்ள மிருகம் நிகழ்த்தும் கலவரங்கள் பலவற்றின எச்சங்கள் தானே. 

காற்றில் அலைந்த கும்மிப்பாடலை அதோ அங்கே, அப்பெரிய மிருகம் முணுமுணுத்து போகிறது. பிச்சைக்கனியும், மந்தையனும், முத்தம்மாளும் மிருகத்தோடு சேர்ந்து பாடலை முணுமுணுத்தபடி போகிறார்கள். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை காடு விரிகிறது.

"...நாலுபேரு அண்ணன் தம்பி
வேட்டுவப்பட்டி வெள்ளை ஐயா
பொட்டி ஓடைக்கு முன்னே
வீரம்மாள் பெற்ற
வீரமுள்ள வெள்ளை ஐயா
சாலச் சந்நிதியைத் 
தானடைக்கச் சொன்னாரையா
 
மெல்லவே பத்திரகாளிக்கு
மேலான உற்சவம் 
தாங்களும் செய்யவென்று
சந்தியிலே அவர் முந்திக் கொண்டு
பாங்காகச் சாமியைப் போக விடாமல்
பலத்த கலகங்கள் 
செய்கின்ற காலத்தில் 
வந்த அவருமாரை 
கொள்ளைச் செய்தாரென்று
வல்ல இவருமார்கள் 
பிராது செய்தார்..
.... ... 
கலகங்கள் தீர
குலங்கள் செழிக்க
அழகாய்த் திருவிழாத் தான் நடத்த
நியாய வழக்கைத் தான் உரைத்தாரே."


முற்றும்.

Monday, June 14, 2021

அப்பாவின் சவப்பெட்டி

 


அப்பாவின் உடலை வீட்டின் முற்றத்திற்கு எடுத்து வந்தனர். ஒடுங்கி. இளைத்துபோய்...எலும்பு தோலுமாய் வற்றிப்போய் இருந்தது உடல். விடுக்கென்று முன்கோபம் கொள்ளும் அப்பாவின் முகம் எந்தவொரு சலனமும் இல்லாமல் இருந்தது. கார்டனிங் செய்வதில் அதீத ஆர்வம் கொண்ட அவரின் கைகள் ஒடுங்கி, ஒல்லியாய் செபமாலை ஒன்றை பற்றியபடி வயிற்றின் மீது விரல்கள் மடித்து கைகுவித்து வைக்கப்பட்டிருந்தன. கால்கள் ஓய்ந்துபோய் கட்டைவிரல்கள் இரண்டும் வேட்டி ஒன்றிலிருந்து கிழித்தெடுத்த துணியினால் இழுத்து கட்டப்பட்டு விரைத்துபோயிருந்தன.

உடலைச் சுற்றி சாங்கியங்கள் செய்து கொண்டிருந்தார்கள். தலைமாட்டில் அம்மாவை அமரச்செய்து ஒவ்வொருவராய் வந்து புதுப்புடவை சார்த்தினர். அம்மாவின் தாலியைக் கழற்றி ஒரு சொம்பிலிருந்த பாலில் போட்டனர். அம்மா, அழுது அழுது எந்த உணர்ச்சியுமின்றி உட்கார்ந்திருந்தார். பேரப்பிள்ளைகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக சாங்கியங்கள் செய்தனர்.

ஊரிலிருந்து வந்து கடைசியாக நான் பார்த்துவிட்டு போனபோது, மூத்தமருமகளான என் மனைவி, அவரின் தலைமாட்டில் அமர்ந்தவாறு நெற்றியை வருடியபடியே 'அப்பா நான் மரியா, உங்க மகள் வந்திருக்கிறேன். தெரியுதா என்றபோது... 'முகம் இலேசா மலர்ந்து தலையாட்டினார். 'ஏதாவது சொல்லனுமா அப்பா', என்று பேச்சினூடே அவள் கேட்டபோது மட்டும், 

'ஆமா'

'சொல்லுங்க அப்பா.'

ஆனால், ஏதோ சொல்ல முயற்சித்தும் அவருக்கு நா எழவில்லை. கொஞ்ச நாட்களாக சாப்பிடுவதை அறவே நிறுத்திகொண்டிருந்திருந்தார். அமைதியான, ஆழமான பிடிவாதக்காரர். தனக்கு 'சரி', என்று நினைத்துவிட்டதை பிடித்துக்கொண்டுவிடுவார். எவர் சொன்னாலும் மாற்றிக்கொள்ளமாட்டார். இப்பொழுது சாப்பாட்டிலும் அதேபோல முரண்டுபிடித்தார். பல்லை இறுக்க கடித்துக்கொண்டு சாப்பிட மறுத்தார். எதனால் அப்படி மறுத்து முரண்டுபிடித்தார் என இதுவரை எவருக்கும் தெரியவில்லை.

வீட்டின் முற்றத்தில் கிடத்தியிருந்த உடலில் அந்த இறுக்கமான பிடிவாதம் தளர்ந்து போயிருந்தது. அந்த இறுக்கமான பிடிவாதம் என்ன ஆனது? சுற்றியிருந்தவர்கள் அவரைப் பற்றி அவரவருக்கு தெரிந்ததை தங்களிடையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவரது உடலை கிடத்தியிருந்த போர்டிக்கோவில், சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்த அவருடைய ஸ்கூட்டி வண்டி தன் கழுத்தை அவர் பக்கமாக திருப்பி அவரைப் பார்த்த வண்ணம் நின்றுகொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. வண்டியில் பேரப்பிள்ளைகள் சிலர் ஏறி இறங்கிய வண்ணம் அப்பாவின் உடலை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த வண்டியை ஏறக்குறைய 15 வருடங்களுக்கு மேலாக ஓட்டிக்கொண்டிருந்தார். அந்த வண்டி ரிப்பேர் ஆனாலும் அதற்கு வைத்தியம் பார்ப்பதுபோல் இவர்தான் எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பார். 'மெக்கானிக் யாரையாவது வரச்சொல்லி பார்;க்கலாம்லப்பா', என்று சொன்னால் கேட்கமாட்டார். 

ஊருக்கு வரும்போதெல்லம் அந்த வண்டியை, நானும் என் தம்பியும் கொஞ்சம்  சிரமப்பட்டு தான் ஓட்டுவோம். வண்டியை மாற்றிவிடலாம் என்றாலும், 'வேண்டாம்' என்று உறுதியாக மறுத்துவிடுவார். 'நான் வெளியே போறதே இல்ல... அப்புறம் எதுக்கு புதுவண்டி', என்று சொல்லிவிடுவார்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோதும் சரி, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தபிறகான அவருடைய கடைசி நாட்களிலும் சரி, அவரின் மேனரிசம், பேசும்விதம் எல்லாம் எனக்கும் இருப்பதை மிக வெளிப்படையாக என் உடலில் பார்த்தேன். அப்பாவுடையது தான் மகனுக்கும் என்றாலும்;.. அந்த மேனரிசங்கள், கோபங்கள், சிரிப்பு... பதற்றமான தன்மை, பயத்தை மறைப்பதற்கான முயற்சிகள், 'எனக்கு எல்லாம் தெரியும்', 'நான் சொல்வதை கேள்', என்பன போன்ற ஒவ்வொன்றும் என்னிடம் அப்படியே அச்சுபிசகாமல் இருப்பதை வெளிப்படையாக உணரவும், பார்க்கவும் முடிந்தது. ஆனால், 'நான் அவ்வாறு இல்லை', என்று இதுவரையிலும் நம்பிக்கொண்டிருந்தேன். என் மனைவியிடம், 'நான் அவ்வாறு நடந்துகொள்கிறேனா?', என்று கேட்டும் பார்த்துக்கொண்டேன். அவளோ.. 'சும்மா எதையாவது யோசிச்சிட்டு இருக்காதீங்க', என்று சொல்லிவிடுவாள். 'சொல்ல முடியாமல் தட்டிக் கழிக்கிறாளோ?', என்றும் கூட நினைத்துக்கொண்டேன். சில சமயங்களில், 'அப்புறம் நீங்க உங்க அப்பா மாதிரிதானே இருப்பீங்க. வேற யாரை மாதிரி இருப்பீங்க?', என் கேட்டுவிட்டு, கடந்துவிடுவாள். அந்த வாக்கியத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லாதது போல் எனக்கு தோன்றும். கொஞ்ச நேரம் என்ன செய்வது என்றே தெரியாமல் அவளை பார்த்தவாறு அமர்ந்திருப்பேன். 'போய் வேலைய பாருங்க', என்று எழுந்து சென்றுவிடுவாள்.

உடலும் அதன் வழியான உடல்மொழியும், நடத்தைகளுமே நாம் ஒவ்வொருவரும் யார்? எந்த வகையில் மனிதர்களாக இந்த சமூகத்தில் பிற மனிதர்கள் மத்தியில் வாழ்கிறோம்? என்பதை வெளிப்படுத்துகிறது. ஒருவர் எப்படிபட்டவர் என்பதை, அவரது நடத்தைகள் கொண்டுதான் சுற்றியிருப்பவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடிகிறது. எவ்வளவு தான் ஒருவர் தன் உண்மை முகத்தை மறைக்க முடிந்தாலும், அது எங்கோ எப்போதோ ஒரு தருணத்தில் அவரை அறியாமலேயே அவரது உடல்மொழி அல்லது நடத்தைகள் வழியாக அவரை வெளிப்படுத்திவிடும்.

அப்பா, எப்போதும் அழகாகவும், நேர்த்தியாகவும் இருப்பதையே விரும்பினார். தன் உடைகளை இஸ்திரி செய்துதான் அணிந்தார். எப்போதும் இன்சர்ட் செய்து பெல்ட் அணிந்துதான் வெளியே கிளம்புவார். எப்போதும் மற்றவர்கள் முன் எவ்வளவு கௌரவமாகவும், பெருமிதமாகவும் வாழ்கிறோம் என்பதில் ஆர்வம் கொண்டிருப்பார். நான் ஒரு தனியார் பள்ளியின் முதல்வராக இருப்பதில் அவருக்கு பெருமை உண்டு. நான் தெருவில் இறங்கி சின்னபசங்களோடு கிரிக்கெட் விளையாடுவதைக் கண்டு ஒவ்வொருமுறையும், 'நீ ஒரு பள்ளிமுதல்வர் என்பதை மறந்துவிடாதே', என்று அறிவுறுத்துவார். 

நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் ஏதோ ஒரு விஷேசம். என்ன விஷேசம் என்று நினைவில் இல்லை. ஆனால் அது ஒரு மதியவேளை. மதிய உணவிற்கு பிறகு மாமாக்கள், அத்தைகள் மற்றும் அப்பா என அனைவரும் பெட்சீடை விரித்து சீட்டு விளையாடுவது என்பது எங்கள் குடும்பங்கள் ஒன்றுசேரும்போது நடக்கும் வழக்கமான நிகழ்வு.

குழந்தைகள் நாங்கள் ஏதோ ஒரு விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தோம். திடீரென அப்பாவின் குரல் சத்தமாக ஒலித்தது. ஏதோ வாக்குவாதம். என் பையன் பத்தாவது பப்ளிக் எக்ஸாம்ல 450 மேல வாங்குவான். அப்படி வாங்குலேனா என் பெயரை மாத்திக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

நான் நல்லா படிக்கிற மாணவன் தான். அதற்காக அப்படியொரு சவாலை விடுவார்களா? அன்றோடு தொலைந்தது எனது தூக்கம். ஒருவேளை நான் 450 மார்க் வாங்காம போயிட்டா? அப்பா இதற்கு முன்பு வரை நான் என்ன படிக்கிறேன்? எப்படி படிக்கிறேன்? என்று கேட்டதே இல்லை. ரேங்க் கார்டில் கையெழுத்து வாங்கும்போது மட்டும் அதென்ன 95 தான் வாங்கியிருக்க... 5 மார்க் என்ன ஆச்சு என்று பார்? என்பதாடு சரி. மற்றபடி என படிப்பைப் பற்றி கேட்டதே இல்லை? அதனாலேயே பயம் கூடியது எனக்கு. இவ்வளவு நம்பிகை கொண்ட அப்பா தோற்றுவிடக் கூடாதே என்கிற தவிப்பே பயமாகவும் பதற்றமாகவும் மாறியிருந்தது. அந்த பதற்றத்திலேயே படித்தேன் 420 தான் மார்க் வாங்கினேன், இருந்தும் அப்பா பெருமைபட்டுக் கொண்டார்.

அப்பாவுக்கு கொஞ்சம் பெருமைபீற்றிக்கொள்ளும் பழக்கம் உண்டு. அம்மாவிடம் இருந்து தொற்றிக்கொண்ட பழக்கமாக இருக்கலாம். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையிலிருந்தபோது கூட அங்கிருந்த டாக்டர், நர்ஸ்களிடம், மற்ற  வருவோர் போவோரிடமெல்லாம் என் பையன் இவன் பள்ளி முதல்வராக இருக்கிறான். பெரிய அறிவாளி என பெருமைபீற்றிக்கொள்வார். அப்பா, எதற்கு இதெல்லாம்? ஸ்கூல் பிரின்ஸிபலாக இருப்பதெல்லாம் ஒரு விசயமா? ஆமா! ஆமா! உன் அறிவுக்கு ஸ்கூல் பிரின்ஸ்பல் எல்லாம் குறைவு தான் என என் வாயை அடைப்பார். 

"நீங்க இப்படியே பேசுங்க.. அவங்க நான் என்னமோ பெரிய ஆளுனு நினைச்சிக்கிட்டு ஹாஸ்பிடல் பில்ல நல்ல ஏத்தபோறாங்க?", என்ற சொல்லிபடி அவரை பார்த்தால், அவர் சிரித்துகொண்டிருப்பார். அந்த சிரிப்பில் ஒரு இயலாமையும், விரக்தியும் இருக்கும். 'பெருமையும், நாலுபேர் நம்மல பற்றி பெருமையா பேசாத வாழ்க்கை என்ன வாழ்க்கை, என்பதான சிரிப்பு அது. 

எனக்கோ நம்மைப் பற்றி எதுவும் சுற்றியிருக்கிறவர்களுக்கு  தெரியாமல் இருப்பது நல்லது. அப்பொழுது தான் நாம் நிம்மதியாக நம் வாழ்க்கையை வாழமுடியும் என்கிற புரிதல்தான் அதிகம். மற்றவரின் அபிப்பிராயங்களுக்கு நான் என் வாழ்க்கையை வாழ முடியாது. ஆனால் அப்பாவோ, சமூகத்தில் வாழும்போது பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம், என்பார். காட்டில் தனியாக துறவி மாதிரி வாழ்;பவன் வேணுனா.. அப்படி இருக்கலாம் ஊருக்குள்ள வாழும்போது பிறரோடு இயைந்து இணைந்து வாழ அவர்களின் நம்மைப் பற்றிய எண்ணம் அவசியமாகிறது என்பார்.

அந்தவகையில் தன் இறப்புக்கு கூட நல்ல கிரோகரியன் பூசை வைக்கவேண்டும். பல பாதிரிமார்கள் சூழ தன் நல்லடக்கம் நடைபெறவேண்டும். என்று சொல்லிக்கொண்டிருப்பார்.  வந்திருந்த உறவினர்களில் ஒருவர் சொன்னார். கொரானாக் கட்டுபாடுகள் சூழலில் எந்த சர்ச்சிற்கு கூட எடுத்துட்டு போக முடியாது ... சவஊர்தியை நேராக கல்லறைக்கு தான் விடவேண்டும். 

அப்பா தனக்கான சவப்பெட்டியைப் பற்றி ஏதேனும் சொன்னாரா? என்று மனதில் ஓட, வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த சவப்பெட்டியையே
 பார்த்துக்கொண்டிருந்தேன்.  


Monday, August 24, 2020

ஒரு பெண் நாய் (A Bitch)

ஆபுத்திரன்பரமக்குடிக்கு அருகிலிருக்கும் ஒரு தனியார்ப் பள்ளிக்கு மாற்றலாகி தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆகிறது.

 

இவனின் உண்மையான பெயர் வேறுஆனால் ஆபுத்திரன் என்கிற பெயரை அவன் விரும்பி தனக்கு தானே வைத்துக்கொண்டான்.

ஒரு சில நெருங்கிய வட்டங்களைத் தவிர வேறு யாரும் அவனை ஆபுத்திரன் என்று அறிந்திருக்கவில்லைமணிமேகலை காப்பியத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் தான் இந்த ஆபுத்திரன் ( புத்திரன் = பசுவிடம் பிறந்தவன்அதாவது வழக்கத்திற்கு மாறான பிறப்புடையவன் என்றும் அர்த்தமாகிறது.) அது மட்டுமல்லாமல் மணிமேகலைக்கு முன்னதாக ஆபுத்திரன் கையில் தான் முதன்முதலில் 'அமுதசுரபிஇருந்ததுவானவர் தலைவன் இந்திரன், ஆபுத்திரன் மீது கொண்ட பொறாமையின் காரணமாக, 'இனி உலகத்தில் மழைபெய்து யாவரும் பசியின்றி போகக்கடவது”, என்று சொல்லிவிட்டபடியால் அமுதசுரபியை நாடுவோர் யாரும் இல்லாமல் போயினர்.

 

சமூகத்திற்கு, தான் கொண்டுள்ள அமுதசுரபியினால், இனி, எவ்வித தேவையும் இல்லை என்கிற பட்சத்தில் அதைக் கடலில் எறிந்துவிட்டு ஆபுத்திரன் வடக்கிருந்து உயிர்துறந்துவிடுகிறான்அதாவது சமூகத்திற்குப் பயனில்லாது போகும்போது தான் உயிர்வாழ்வதில் பொருளில்லை என்று அவன் மறித்துப்போகிறான்இந்த ஒரு காரணத்திற்காகத்தான் இவனும் தன் பெயரை ஆபுத்திரன் என வைத்துக்கொண்டான்.

 

மாலை நேரம்;. குளிர்ந்த காற்று மெல்லிய விசில் சத்தத்துடன் அலை அலையாய், மொட்டை மாடியில் நின்றுகொண்டிருந்த அவனைக் கடந்துகொண்டிருந்ததுமழைபெய்வதற்கான அறிகுறியாகக் கரிசல் மண்ணின் வாசனை காற்றின் ஒவ்வொரு கடந்துபோகுதலிலும் அவன் நாசியில் உரசிற்றுஒவ்வொருமுறையும் அந்த வாசனையை உள்ளிழுத்துவிடும் விதமாகப் பெருமூச்சொன்றை அவ்வப்போது ஆழமாய் இழுத்துவிட்டுக்கொண்டான்சுவரை ஒட்டியிருந்த கயிற்றுக்கட்டிலை வாஞ்சையாய் திரும்பிப் பார்த்தான்.; கட்டிலில் கலைந்து கிடந்த போர்வைக்குள் அவன் உடம்பின் வாசனை அடர்த்தியாய் ஏறியிருந்ததுகட்டிலின் கயிறு, தொட்டில் கணக்காய் தொய்வடைந்திருப்பது அவனுக்குச் சுகமாக இருந்ததுஅதில் அவன் தனியாக வானத்தைப் பார்த்தவாறு படுத்துக் கிடந்தான்ஊர் மாறி வரும்போது குடும்பத்தை தன்னோடு அழைத்துவந்திருக்கவில்லைஒரு சில மாதங்கள் கழித்து அழைத்துவரலாம் என்று நினைத்திருந்தான்.

 

புதிய ஊர்புதிய பள்ளிபுதிய ஆசிரியர்கள்புதிய மாணவர்;கள் - இவை எல்லாவற்றையும்  சிந்தித்தவாறே படுத்துக் கிடந்தான்அமைதியாய் இருந்தது, மேகங்கள் நிறைந்திருந்த வானம்மேகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வடிவங்களைக் கொண்டு வானம் முழுவதும் படர்ந்து கிடந்தன.

ஒவ்வொரு மேகவடிவங்களையும் படித்தவாறு படுத்துக் கிடந்தான்தொலைவில் ஒரு பெண் நாயொன்று இடையிடையே குரைத்துக்கொண்டிருந்ததுநாயின் குரைப்பு பல்வேறு கற்பனை உருவங்களாய் படர்ந்து கிடந்த மேகங்களை, காற்றின் ஊடாக சிதறடித்துக் கொண்டிருந்தது.

 

முதலில் அந்த நாயின் குரைத்தலை அவ்வளவாக அவன் கவனித்திருக்கவில்லைஅவன் மேகங்களை ஆர்வமாய் படித்துக்கொண்டிருந்தான்ஒரு மேகக் கூட்டம், பத்து தலைகள் கொண்டு, பார்ப்பதற்கு இராவணனைப்போல் காட்சியளித்தது. அதோடு மட்டுமல்லாமல்  அந்த மேகக் கூட்டம், தன் பத்து தலைகளும் காற்றில் பிரிந்து உருண்டோட அவற்றை மீண்டும் பொறுக்கி, அவன் அவைகளைத் தன் தலையில் பொருத்திக்கொள்ளும் தோற்றத்தில் இருந்ததுஅதை ஆபுத்திரன் உன்னிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் விடாமல் இடையிடையே குரைத்த கொண்டிருந்த அந்த நாயின் எரிச்சல் கொண்ட குரைத்தலைக் கவனித்தான்

 

எழுந்து வந்து மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி மாலைநேர இருளுக்குள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் அந்த பெண் நாயின் குரைத்தல் வந்த திசையில் உற்றுநோக்கி நாயைத் தேடினான்.

காற்றில் கலந்த புழுதியின் ஊடாக அந்த நாயின் குரைத்தல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த குரைத்தல் ஒருவித எரிச்சல் தன்மையுடன் இருந்ததாய் அவனுக்குப்பட்டதுஅவன் பதற்றமானான்எங்கிருந்து வருகிறது இந்த குரைத்தல் என்று இன்னும் ஆழமாகக் கண்களைக் கூர்மைப்படுத்திப் பார்த்தான்மாலைநேர இருள் மெல்லக் கவிழ்ந்துகொண்டிருந்ததுதொலைவில் நின்ற ஒரு வேப்பமரத்தினடியில் கறுப்பாய் ஒரு நிழல் நகர்ந்துகொண்டிருந்ததுஅந்த நாய், அவன் கண்ணில் பட்டதுஅதுவொரு கறுப்பு நிற பெண் நாய்அந்த நாயைச் சுற்றி நான்கைந்து ஆண் நாய்கள் நின்றுகொண்டிருந்தனஅவைகள், அவளைப் புணர்வதற்காகச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தனஅந்த பெண் நாய் களைப்படைந்திருந்ததுஅருகில் நெருங்கிய ஒவ்வொரு ஆண் நாயையும் குரைத்துத் துரத்தியவாறே இருந்ததுஎவ்வளவு நேரம் இவ்வாறு குரைத்துக் குரைத்துத் துரத்திக்கொண்டிருந்ததோ தெரியவில்லைகுரைத்துக் குரைத்து... துரத்தித் துரத்தி .. விரட்டி விரட்டி ஓய்ந்துபோயிருந்தது, அதன் குரலில், உடலசைவில் நன்றாகவே தெரிந்ததுசுற்றியிருந்த ஆண் நாய்களும், ஒன்றன்பின் ஒன்றாய் விடாது அவளை முயன்றபடி இருந்தன.

 

அவனுள் மெல்ல ஒரு வேதனையின் கோடு தடித்துக்கொண்டே போவதாய் அவன் உணர்;ந்தான்கீழே இறங்கிப் போய் ஆண் நாய்கள் அனைத்தையும் ஓட ஓட அடித்து விரட்டி விட வேண்டும்போல் இருந்ததுஆனால், சுற்றியிருந்த வீடுகளில் இருப்பவர்கள் அவனைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? எனத் தயங்கினான்.

அந்த பெண் நாய் உண்மையிலேயே துவண்டுபோயிருந்ததுஇவனும் அயர்ந்துபோய் கட்டிலில் வந்து படுத்தான்மீண்டும் அந்த நாய் குரைக்கும் போதெல்லாம் ஓடிப்போய் கைப்பிடிச் சுவரை இருக்கப் பற்றிக்கொண்டு அந்த நாயைத் தேடினான்எதுவும் செய்ய இயலா வேதனையில் படுக்கைக்கும் கைப்பிடிச்சுவருக்குமிடையே ஓடுவதும் பின் படுப்பதும், பின் ஓடுவதும், எனக் கிடந்தான்.

 

இருள் மெல்ல அடர்த்தியாகிக் கொண்டே போனதுநாயின்ஓலம் மட்டும் இன்னும்;; நின்றபாடில்லைதிடீரென 'வீல்என ஒரு நாயின் குரல்ஓடிப் போய் பார்த்தான்அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பையன்களிலிருந்து ஒருவன், எரிச்சல்  அடைந்தவனாய் கற்களைப் பொறுக்கி ஒவ்வொரு ஆண் நாயையும் குறிவைத்து அடித்துக்கொண்டிருந்தான்எல்லா ஆண் நாய்களும் சிதறி ஓடிக்கொண்டிருந்தன.

அந்த பெண் நாயைத் தேடினான் இவன்புதிதாய் கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு வீட்டின் திண்ணைக்கு அடியில் ஒண்டிக் கிடந்தது அந்த பெண் நாய்எல்லா ஆண் நாய்களும் ஓடிவிட்ட நிலையில் கால்களை மெல்ல நீட்டிப் படுத்தது.

நாயை விரட்டிய அந்த பையனைத் தேடினான்அவன் அதோ அந்த பாதையில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான்அவனுக்கு முன்பாக வயசு பெண்ணொருத்தி இவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்து முறைத்தவாறும், வாயில் முணுமுணுத்துத் திட்டியவாறும் சென்றுகொண்டிருந்தாள்.

 

அவர்கள் இருவரும் கண்ணிலிருந்து மறையும் வரை அவன் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்


Monday, August 17, 2020

ஒரு விறலியின் காதல்



பகுதி 1

இராஜேந்திர காண்டம்


இடம் : சோழப்பனையூர், தளிச்சேரி, பரவை நாச்சியாரின் இல்லம்.

காலம்: 1020 முதல் 1030


இராஜேந்திரா நிறுத்து! உன் வார்த்தைகள் எனக்கு வெற்றுக் கூச்சலாக இருக்கின்றன. போர் மட்டுமே வீரம் என்று உனக்குக் கற்பித்தவர் யார்? வாளும், வேலும் மட்டுமே நிறைந்திருக்கும் உன் வாழ்க்கை எனக்குப் பெரும் அயர்ச்சியைக் கொடுக்கிறது இராஜேந்திரா!

அனைத்தையும் உன் பராக்கிரம வீர தீரச்செயலாலும், தினவெடுத்த வெற்றிச் செருக்கினாலும் கடந்துவிடலாம் என நினைக்கிறாயா?

நீ இல்லாத தருணங்களில் உன் உருவத்தை மனக்கண்முன் நிறுத்திப் பார்க்க முயலுகிறேன். இரத்தக் கரைகளால் சிவந்த உன் கரங்கள், போர் உக்கிரம் காட்டும் தோள்கள், நாட்டின் எல்லைகள் விரிவடையப் பயணிக்கும் கால்கள் என்பதான பிம்பங்களாக மட்டுமே நீ எனக்கு எஞ்சி நிற்கிறாய் இராஜேந்திரா. 'போர்' என்பதைத்  தாண்டிய ஒரு வாழ்வை நீ என்றைக்காவது வாழ்ந்து பார்த்திருக்கிறாயா?

உத்தமசோழன்விக்கிரமசோழன், அதிசயசோழன், மலைநாடு கொண்டான்...என எத்தனை எத்தனை பட்டங்கள் ஒருவனைக் கொண்டாட? இத்தனையும் போர்களினால் வந்தவையா அல்லது நீ வாழ்ந்த வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டதா?   சொல் இராஜேந்திரா.

உதாரணத்திற்கு, நீ என்றைக்காவது, எவரையாவது காதலித்ததுண்டா? எத்தனை முறை என் ஆடலரங்கிற்கு வந்திருக்கிறாய்? என் ஆடலை, அல்லது என்னைக் கவனித்துக் கண்டிருக்கிறாயா?  காதல் என்பதும், கலை என்பதும் நீ வழிநடத்தும் வன்முறைப் போர்களைப் போன்றதாக உனக்குத்  தோன்றுகிறதா?  காதலும் கலையும் கொண்ட வாழ்வு என்பது உன் போர்க்களத்தின் வேகங்களையும் உக்கிரங்களையும் விட வெகு நுட்பமானதும், மென்மையானதும் என்பதை உனக்கு எப்படி நான் புரியவைப்பேன்? ஒரு பெண்ணாக, அத்தகைய வாழ்வில் நான் காணும் ஆண்மையின் சூட்சம நிலை வேறு, இராஜேந்திரா!

நான் ஒரு தளிச்சேரிப் பெண் தானே? ஆனாலும் என் ஆடலின் ஒவ்வொரு அசைவிலும், காதல்ரசம் கொண்டவளாய் இரசித்து, என் பெண்மை முழுமையும் நிரம்பிவழிய, அபிநய பாவங்களுடனும், ஸ்வர தாளங்களுடனும் ஆடலின் ஆண்மையில் கரைந்து போகிறேனே, அதில்தான் அடங்கியிருக்கிறது நான் சொல்லவிழையும் யாவும் இராஜேந்திரா!  காதல், வீரம், கருணை, பயம், கோபம், என வாழ்வின் அனைத்து சூட்சமங்களும் சங்கமமாகும் பிரபஞ்ச மூச்சின் புள்ளியை நீ புரிந்து கொள்வது கடினம்.

பரவை நாச்சியாரின் ஒவ்வொரு சொல்லும் இராஜேந்திரனை  நிறையவே அசைத்திருந்தன.  எங்கும்  எதிலும் ஒருவித கர்வத்தோடு  காட்டின் புலியெனத் திரிந்தவன், ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வது எனத் தெரியாது திக்கற்றவனாய் அவளை ஏறிட்டுப் பார்த்தான். இருக்கையில் இடதுபுறமாகச் சாய்ந்த வண்ணம், உருட்டுத் தலையணைகளை முட்டுக்கொடுத்தவளாய் அவள் அமர்ந்திருந்தாள்.   செங்காந்தள் பூவின் இதழென உதடுகள், கள்ளுண்டு செருக்கேறிய கண்கள் எனப் பெண்மையின் திமிருடன் அவள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.  கண்களில் சிறிதும் அசைவில்லை.   கையில் வைத்திருந்த கலயத்திலுள்ள கள்ளின் நெடி அவளின் முகத்தில் நீர்த்திவலைகளாகத் தெறித்திருந்தது.  கள்ளிருந்த கலயத்தை  அவள் பற்றியிருந்தவிதமே ஒரு அபிநயமாக இருந்தது. அவள் உடம்பில் ஊறியிருந்த ஆடற்கலை அவளையும் மீறித் திமிறிக் கொண்டிருந்தது. அவளின் கள்ளேறிய முகம் இதுவரை அவன் பார்த்திராத பாவத்துடன் இருந்தது.  இத்தனையும் இருக்கும்படி அவள் கர்வமாய் அமர்ந்திருந்தாள்.

ஒருநிமிடம் இராஜேந்திரன்  திகைத்து நின்றான். இராஜேந்திரனை அசைத்துப் பார்த்தது 'பயம்' அல்ல.  மாறாக, அவன்  முன்  நடந்துகொண்டிருப்பது அனைத்தும் அவனுக்குப் புதிதாக இருந்ததுதான் அவனது திகைப்பிற்குக் காரணம்.  எத்துணை  பெரிய  படையெடுப்புகளாயினும், பெரும்போர்களாயினும், தன் ஆருயிர் அரசி வீரமாதேவியாரிடம் திரும்பும்போது அவளது பேரன்பு அவனை முற்றிலுமாக ஆசுவாச படுத்திவிடும்.  ஆனால், இன்று இங்கே, அவன் இதுவரை வீரமா தேவியின் வழியாகக் கண்ட பெண்மையின் பேரன்பும், ஆசுவாசப்படுத்துதலும் முத்துமாலையிலிருந்து சிதறி விழும் பரல்களாய் தன்னைச்சுற்றிக் கிடப்பதாகப்  பார்த்தான். முதன்முதலாகத் தான் யாருமற்றவனாய் இருப்பதாய் உணர்ந்தான்.

பரவை நாச்சியாரின் சொற்கள் ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தன.  அவளின் சொற்கோர்வைகளின் வழியாக அவள் சொன்ன ஒவ்வொன்றும் அவனின் உணர்வு முடிச்சுகளை அவிழ்த்துவிட்டிருந்தன. அவனைச் சுற்றிச் சிதறிக் கிடந்தவற்றை வீரமாதேவியாரின் பேரன்பின் முத்துக்களென அவன் நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் அவை ஒவ்வொன்றும் பரவை நாச்சியாரின் மீதான அவனின் உணர்வு முடிச்சுகள்.

இராஜேந்திரன், நேற்று இவளை மண்டபத்தில் பார்த்ததோடு தஞ்சைக்குத் திரும்பியிருக்கலாம். ஏன் காதல் வயப்பட்டான்?  அவள் அவனை விரும்பவில்லையா?

பரவை நாச்சியாரின் இந்த  வெறுப்பிற்குக்  காரணம்?

உண்மையிலேயே அவள் வெறுத்துத் தான் பேசினாளா?

வீர ராஜேந்திரனுக்கு இணையாக வாதிடும் பரவை நாச்சியார்.

யார் இந்த பரவை நாச்சியார்? 



பகுதி 2

பரவை நாச்சியார் காண்டம்


இடம்: சோழ வளநாட்டின் துணைக்கோட்டமான சோழப்பனையூர்.

காலம்: 1016 முதல் 1020


இவளின் பெயர் பரவை.  ஆரூரில் எழுந்தருளியுள்ள சுந்தரேஸ்வரரின் மனைவி பெயரையே கொண்டிருந்தவள். சோழ வளநாட்டின் துணைக் கோட்டங்களில் ஒன்றான பனையபுரத்தைச் சேர்ந்தவள். பனையபுர ஈஸ்வரமுடையார் திருக்கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். பேரழகும், பேரறிவும் கொண்ட நாட்டியமங்கை. திருவாரூர் தியாக விடங்கர் திருக்கோயிலின் தலைக்கோலியாகவும் செயல்பட்டு வந்தவள்.

சோழப் பேரரசு, கிராமங்கள், ஊர்கள் எனவும், இருபது முப்பது ஊர்களும், கிராமங்களும் சேர்ந்ததுநாடு’ எனவும் பல நாடுகள் சேர்ந்ததுவளநாடு’ எனவும், பல வளநாடுகள் சேர்ந்ததுமண்டலங்களாகவும்’ பிரிந்த உள்ளாட்சிமுறையைக் கொண்டிருந்தது. பிராமணர்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். அரசர்கள் வழங்கிய பிரமதேயங்களும், இறையிலி நிலங்களும், தேவதானங்களும் தவிரக் கோயில் மற்றும் அரசு சார்ந்த பிறவேலைகளும் பிராமணர்களின்  வாழ்வாதாரங்களாக இருந்தன.

பரவை, தன் தந்தையின் கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். தந்தை, பனையபுர  கிராம மகாசபைக்குக்குடவோலை’ முறைப்படி ஒவ்வொருமுறையும் தவறாமல் தேர்ந்தெடுக்கப்படுபவராகவும், கிராம நிர்வாகத்தில் கோலோச்சுபவராகவும் இருந்தவர். கிராம சபைக்குத் தலைமைகளைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறையை அறமற்ற  ஒன்றாகப் பரவை கருதினாள். கிராம சபைக்கான தேர்தலில் போட்டியிடுபவர் செல்வந்தர்களாகவும், பிராமணர்களாகவும் இருக்க வேண்டும் என்பதையும், பணம் இல்லாத ஏழைகள் மற்றும் பிற வகுப்பைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடவும் அவர்களது குடியிருப்புப் பகுதிகளில் தேர்தலை  நடத்துவதற்கும் கூட உரிமைகள் இல்லாதவர்களாகவும் இருந்ததைப்  பரவை எதிர்த்தாள்.

ஏற்கனவே சிறுநில உடமையாளர்களின் உரிமையும், உடைமையும் பறிக்கப்பட்டு இறையிலி நிலமாகவும் தேவதானமாகவும் பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும் அரசமுறைகளுக்கு எதிராகப் பலவிதங்களில் போராடிக்கொண்டிருந்தாள். சென்ற ஆடித் திருவாதிரைப் பெரியநாள் விழாவின்போது (கி.பி1017) தங்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு இறையிலி நிலங்களாக்கப்பட்டதை எதிர்த்து இரண்டு பெண்கள் கோயில் முன் தீ வளர்த்துத் தீயிலிறங்கி உயிர்த்தியாகம் செய்தபோது இந்த அறமற்ற செயல்களுக்கெதிராக கிளிர்ச்சி செய்யுமளவிற்குப் போனாள் பரவை. பரவையின் இவ்வகையான போக்கு அவளை அவளது தந்தையின் வீட்டிலிருந்து வெளியேற வைத்தது. அவள் தன் தந்தையின் வீட்டை விட்டு வெளியேறி இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.



பகுதி 3

திக்விஜயகாண்டம்


இது இராஜேந்திரனுக்குப் புதிது. ஆம், பரவை நாச்சியாளின் பேச்சு முற்றிலும் புதிது.

மதுராந்தகன்! பராக்கிரம பரகேசரி!  இவன் எழுந்து நின்ற இடங்கள் அனைத்தும், எண்ணத்தின் வேகத்தில் இவனுக்கு அடிபணிந்தன. அத்தை குந்தவை நாச்சியாரின் நேரடி வளர்ப்பில் வளர்ந்ததால் அரசவையின் நடப்புகளை மட்டுமன்றி ஒரு அரசனாக எல்லைகளைக் கடந்து தன்னை வியாபித்துக்கொள்ளும் திறன் மிக இயல்பாக அவனுக்கு இருந்தது.

அத்தை குந்தவை நாச்சியாரின் ராஜதந்திரமும், பாட்டி செம்பியன் மாதேவியாரின் நிதானமும் ஒருசேர அவனை புடமிட்டுவார்த்தெடுத்திருந்தபோதிலும், இராஜேந்திரன் ஏதோவொரு வகையில் விரக்தியும், வெறுமையும் கொண்ட ஆளுமையாகவே இருந்தான். மனநிறைவு என்பது அவனுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. மனநிறைவற்ற மனிதனின் வாழ்க்கை ஆழ்கடலின் ஆழத்தையும், அமைதியையும் போல இல்லாமல் எழுந்து அடங்கி மீண்டெழும் பேரலையின் இரைச்சல் என்பதாகவே இருக்கும். அமைதியின்மையின் வேர்கள் இராஜேந்திரனை இறுக்கிக்கொண்டே இருந்தன.

சோழப்பேரரசிற்காக இல்லாவிட்டாலும் தன் மனநிறைவிற்காக போர்களில் ஈடுபட ஆரம்பித்தான் இராஜேந்திரன். எல்லைகள் கடந்து, கடல்கள் கடந்து நாடுகளை வென்றான். பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொண்டு வந்தான். அவனின் படைத்தலைவரும், அரசியல் ஆலோசகருமான வல்லவரையர் வந்தியத்தேவன், தந்தை இராஜராஜ சோழருக்கும் வலக்கரமாக விளங்கியவர். பல நேரங்களில் இரஜேந்திரனின் அதிதீவிரமான படைத் தாக்குதல்களைக் கண்டு அவர் மிரண்டேபோனார். இராஜேந்திரனைப் பற்றி 'இராஜேந்திரன் நாடுகளை கைப்பற்றியவன், வென்றவன் என்பதைவிட, அவற்றை அவன் சூரையாடினான், என்பதாகவே தனக்கு தோன்றுவதாக’, அவர் சொல்லியக் கூற்று எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை இராஜேந்திரனின் போர்களங்களைக் கண்டவர்களுக்குப் புரியும்.  

இரஜேந்திரன், வெறிகொண்டவனாய் சேர, பாண்டிய படைகளைத் தன்னடிப்படுத்தி திரும்பியிருந்த நேரம், இராஜேந்திரனை வரச்சொல்லி தந்தையார் இராஜராஜன் செய்தி அனுப்பிருந்தார். இரஜேந்திரன் எவரையும் சந்திக்க மனமில்லாதவனாயிருந்தான். தந்தையார் இரண்டு இரவுகள் காத்திருந்தார். மூன்றாம் நாள் மாலை இராஜேந்திரனைத் தேடி அவன் அரண்மனைக்கே வந்துவிட்டிருந்தார்.

உள்மண்டபத்தில் நுழையும் போதே, மாடத்தின் வழியாகக் கடந்துகொண்டிருந்த மாலை வெயிலினுடைய மென்மையான கதிர்களின் ஊடாக யாழின் இசை, ஏதோவொரு சிந்தனையுடன் உள்நுழைந்த தந்தையார் இராஜராஜனை இழுத்து நிறுத்தியது. கண்கள் மூடியபடி இசையில் இலயித்திருந்த இராஜேந்திரன் தந்தையாரின் வருகையைக் கவனிக்கவில்லை. இசையில் கரைந்தவராய் இராஜராஜன், எதிரில் இருந்த இருக்கையில் அரவமில்லாமல் அமைதியாக அமர்ந்தார். நாழிகள் கடந்தன. இராஜேந்திரன் கண்களை மெல்லத் திறந்தபோது எதிரே தந்தையார் அமர்ந்திருப்பதைக் கண்டான். 'இராஜேந்திரா… அருமை! அருமை! வாளும் வேலும் பிடித்து இறுகிய உன் கைகள், யாழின் நரம்பிழைகளை கையாளும் இலாவகம் மனதை உருக்கிவிடுகிறது' என்றபடி பேச்சைத் தொடங்கினார் இராஜராஜன். மெல்ல இராஜேந்திரனுடைய இசையைப்பற்றி ஆரம்பித்த உரையாடல் பல தலைப்புகளுக்குத் தாவித்தாவி பின் சோழப்பனையூர் நிகழ்வுகளுக்கு வந்து நின்றது. சோழப்பனையூர் துணைநாட்டில் கிளர்ச்சிக் குழுக்கள் உருவாகியுள்ளதாக ஒற்றன் மூலம் செய்தி வந்திருப்பதாகவும் அதுகுறித்து என்ன செய்யலாம் என ஆலோசித்து போகவேப் தான் வந்ததாகவும் சொல்லி நிறுத்தினார், தந்தையார் இராஜராஜன்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, இக்கிளர்ச்சிகள் ஒரு பெண்ணினால் முன்னெடுக்கப்படுவதாவும் செய்தி, எனச் சொல்லி மாடத்தின் வழியாக மறைந்துகொண்டிருக்கும் மாலைச் சூரியனின் கதிர்களை திரைச்சீலைகளைக் கொண்டு இழுத்துமூடினார்.

'பெண்ணினால் கிளர்ச்சி முன்னெடுக்கப்படுகிறது'. அதுவரை யாழின் நரம்புகளை ஸ்பரிசித்தவாறே தந்தையார் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த இராஜேந்திரன் ஒரு துளி நாழிகை நிறுத்திவிட்டு தந்தையாரை ஏறிட்டு பார்த்தான்.

'இரண்டு நாட்களில் பனையபுரம் புறப்படுகிறேன் தந்தையே' என்றுசொல்லிவிட்டு தந்தையையின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அரண்மனைக்குள் சென்றுவிட்டான் இராஜேந்திரன். விரிவானதொரு உரையாடல் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த தந்தையார் இராஜராஜன் என்ன செய்வது எனப் புரியாமல், அவரும் தன் அரண்மனைக்குத் திரும்பினார்.

ஏன் அவ்வாறு நடந்துகொண்டேன்? தந்தையாரை மதியாதது போல் அல்லவா வெளியேறிவிட்டேன். அந்த பெண் யார்? சோழ பேரரசிற்குள்ளாக ஒரு பெண்ணின் எதிர்ப்பா? இருப்புகொள்ளாமல் அடுத்தநாள் பனையபுரம் புறப்படுவதற்கான ஆயத்தங்கள் குறித்து சிந்தித்தவாறே அன்றிரவு உறங்கிப்போனான்.


பகுதி 4

கற்பகக்கா காண்டம்

ஒரு அரசனாக இல்லாமல் ஒரு அரசப் பயணியாக பனையபுரம் வந்திறங்கினான் இராஜேந்திரன். மாலைக் கதிரவன் மறைந்துகொண்டிருந்தான். சிவப்பு கலந்த வானத்தின் பின்புலத்தில் தலமரங்களான பனைமரங்கள் காற்றை நிறைத்து அசைந்துகொண்டிருந்தன. பனைமரக் காடுகள் சூழ அமைந்திருந்தது ஈஸ்வரமுடையார் கோயிலும், கோயிலைச் சுற்றிய ஊரும். இவ்வளவு அமைதியான அழகான ஊரிலிருந்தா சோழ சாம்ராஜியத்திற்கு எதிரான கோபத்தின் துளி? ஆச்சரியமாக இருந்தது. ஊரின் நடுப்பகுதியிலிருந்த விளக்குத்தூணில் பந்தம் ஏற்றினான் ஒருவன். தீப்பந்தத்தின் ஒளியில் கொஞ்சம் கொஞ்சமாக இரவானது ஊரைக் கவ்விகொள்ள ஆரம்பித்தது.

ஊர் கிராம சபைக்கு மட்டுமே, வந்திருப்பது அரசன் என்பது அறிவுறுத்தப்பட்டிருந்தது. அடுத்தநாள் காலை ஊர்க் கோவிலிருக்கும் அரசமண்டபத்தில் கிராம சபையினர் தவிர்த்த ஊரின் பிற வகுப்புகளுக்கான ஊர்க்கூட்டம் ஏற்பாடாயிருந்தது. இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன் பின்னணியில் இருந்தது பரவை நங்கை என்பதை இராஜேந்திரன் அறிந்துகொண்டான்.

ஊர்க் கூட்டத்திற்குப் போவது என முடிவுசெய்தான். மக்களோடு மக்களாகக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிடவேண்டும் எனவும், கூட்டத்தில் வைத்தே பரவையைப் பார்த்துவிட வேண்டும் எனவும் உறுதிசெய்து கொண்டான்.

அடுத்தநாள் கூட்டம் ஆரம்பமாகியிருந்தது. பெரிய நாட்டாரும், ஐந்நூற்றுவர் எனப்படும் வணிகக்குழுவின் பிரதிநிதிகளும், கலணையார் எனப்படும் பல்தொழில் செய்வோரின் பிரதிநிதிக்குழுக்களும் பேசிக்கொண்டிருந்தனர். ஊர் இருக்கையில் ஒரு பெண் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் தான் பரவை நங்கை என யாரும் இராஜேந்திரனுக்கு சொல்லத் தேவையில்லாமல் இருந்தது.

ஒவ்வொரு தனிமனிதனையும், குழுக்களையும் இணைத்து ஒரு சமூக இயக்கமாக அவள் மாற்றிக்கொண்டிருந்தாள். அரசின் பலவகையான வரிச்சட்டங்களைப்பற்றியும், பாதிக்கபட்ட மக்களின் குரலையும் உள்ளடக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றி அரசாங்க மண்டல முதலியிடம் சமர்பிக்க முடிவுசெய்தபின்பு கூட்டம் கலைந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கலைந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இராஜேந்திரனும் நடக்க ஆரம்பித்தான். ஊர் எல்லையில் தனித்திருந்தவீட்டில் தான் அவன் தங்குவதாய் இருந்தது. ஊரைத் தாண்டி பனைமரங்கள் வரிசையாய் அமைந்த தடத்தில் இறங்கினான். யாரும் தன்னை கவனிக்கிறார்களா எனத் திரும்பி திரும்பி பார்த்தவாறே நடக்கலானான். ஏனெனில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ஊர் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பரவை இவனை ஓரிருமுறை பார்த்ததை இவன் கவனித்திருந்தான். ஒருசில மணித்துளிகளே நீடித்த அந்த பார்வையில் வித்தியாசம் இருந்ததை அவன் கவனித்திருந்தான்.

என்னை எதற்காக அப்படி பார்த்தாள்? அவள் பார்த்த அந்த இரண்டு முறையும் அவள் கண்களில் பல கேள்விகள் தோன்றி மறைந்திருந்தாக அவனுக்குப்பட்டது.

குதிரையின் காலடியோசை வெகு அருகாமையில் கேட்டது. அவன் சுதாரிக்கும் முன் குதிரை அவனை மறித்தபடி நின்றது. குதிரையின் மேல் பரவை நங்கை புன்முறுவலுடன் அமர்ந்திருந்தாள்.

“நலமா இராஜேந்திரா? ஏது இவ்வளவு தூரம்? பனையபுரத்திற்கு உன் வரவால் நன்மை விளைந்தால் சரி. என் பெயர் பரவை. தளிச்சேரி பெண்.”

'என் இல்லத்தில் சந்திக்கலாமா? அல்லது உன் இல்லத்தில் சந்திக்கலாமா இராஜேந்திரா? எனக்கேட்டுவிட்டு, அவன் பதிலை எதிர்பார்க்காமல், 'என் இல்லத்தில் காலையில் சந்திப்போம் எனச் சொல்லியவாறு குதிரையை ஊரை நோக்கி விரட்டினாள்.'

 

பகுதி 5

முடிவுறுக்காண்டம்

 

அதிகாலையிலேயே பனையபுர ஈஸ்வரமுடையாரை வணங்கிவிட்டு ஊரை சுற்றிப் பார்த்தவனாய் பரவை நங்கையின் இல்லம் வந்து சேர்ந்தான். பரவை நங்கை இவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தவளாய்வா இராஜேந்திரா”, என்றாள்.

'இவள் உண்மையிலேயே என்னை யார் என்று தெரிந்துதான் பெயர் சொல்லி அழைக்கிறாளா?  இல்லை அரைகுறை விசயங்களை மட்டும் வைத்துக்கொண்டு அப்படி அழைக்கிறாளா? என்ன ஒரு தைரியம்?'

அவளை  உற்றுப்பார்த்தவாறே அவள் அமர்ந்திருந்த மண்டப அறையினுள் நுழைந்தான்.  அவனின் உடல் மட்டுமே அங்கு இருந்தது, சிந்தனை அத்தனையும் ஆச்சரியமுடன் அலைபாய்ந்து கொண்டிருந்தன. குந்தவை பிராட்டியார் ஒருமுறை அவனிடம் கூறியது அவனது மனக்கண் முன் வந்து போயிற்று.

'சிந்தைத்தெளிவும், செயல் நேர்மையும் இருக்குமிடத்தில் சொல் துணிவு இருக்கும் இராஜேந்திரா.   இதில் ஆண், பெண் என்கிற பால்பேதம் எதுவும் இல்லை.'

'ஆம் இராஜேந்திரா', என்று அவன் சிந்தனையில் குறுக்கிட்டாள் பரவை நங்கை.

'எதை இவள் ஆம் என்று ஆமோதிக்கிறாள்?  நான் மனதில் சிந்திப்பதைக் கூட அறிந்துவிடும் வித்தை கற்றவளோ?' என்று ஆச்சரியம் இன்னும் அதிகமாய் மேலிட அவள் காட்டிய இடத்தில் அமர்ந்தான்.

'ஆம் இராஜேந்திரா.   நீ தேடி வந்த பெண் நான் தான்.   என் பெயர் பரவை நாச்சியார்.'

“அறிவேன்.  நேற்று உன்னை கற்பகக்கா மண்டபத்தில் பார்த்தபொழுதே  உறுதி படுத்திக்கொண்டுவிட்டேன். சோழப்பேரரசிற்கு எதிராகச் செயல்படுபவள்.  சோழப்பேரரசின் நலத்திட்டங்களைப் பற்றிப் பேசாமல் மக்களைத்   திசைதிருப்புகிறாய்.

நாட்டின் உள்கட்டமைப்புகளை மத்திய மற்றும் பிராந்திய ஆட்சிமுறைகளை குறை கூறிக்கொண்டு, மக்களை அரசுக்கும், நாட்டிற்கும் எதிராகத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறாய்.   அரசு நிலங்களை மக்களுக்கு அரசு கொடுப்பதைத் தடுத்து மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறாய்.  மக்களை அரசுக்கு எதிராக வழிநடத்தும் உன் தேசத்துரோக செயல்களை நன்றாக அறிவேன் நான்.

இராஜேந்திரனின் கண்கள் கொஞ்சமாய் சிவந்திருந்தன. பரவை நிதானத்துடன் இராஜேந்திரன் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆக, மக்களுக்கானதை அரசு செய்துகொண்டிருக்கிறது என நீ கண்மூடித்தனமாய் நம்புகிறாய் அல்லவா? அதன்பொருட்டு மக்கள் அத்தகைய அரசிற்கு உண்மையுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறாய்.  உன் கணக்கின் படி, அரசுக்கு எதிரான கேள்விகளோ, செயல்பாடுகளோ, அவை எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், அவை தேசத்துரோகங்கள் இல்லையா? 

ம்ம்…ம் நியாயமானது தான். 

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை இராஜேந்திரா.  ஏனெனில் நீ நிற்கும் இடம் வேறு. எனவே உனது பார்வைகளும் வேறு.  நீ மேலே அரியாசனத்தில் அமர்ந்து கொண்டு கீழே இருக்கும் மக்களைப் பார்க்கிறாய்.

ஆனால் நான் மக்களிடையே நிற்கிறேன். உன் அரசு மக்களுக்கானது எனச் சொல்லும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றன. அரசு தன் மக்களை மறந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக, வர்க்கத்திற்காகவே உன் அரசு செயல்படுகிறது.  இது புரியவேண்டுமென்றால் நீ நின்று பார்க்கவேண்டிய தளம் வேறு இராஜேந்திரா. 

நீ தேசத்துரோகம்  பற்றிப் பேசுகிறாய்.  நானோ மக்கள் துரோகம்  பற்றிப்  பேசுகிறேன். மக்களே தேசமாகிறது. மக்கள் தான் தேசம். மக்களின்றி வெறும் தேசம் மட்டும் அந்தகாரத்தில் ஊசலாட இயலாது இராஜேந்திரா.

உங்கள் அரசன் இங்குக் கடவுளுக்கு நிகரானவனாகப்  பார்க்கப்படுகிறான். ஆனால் அக்கடவுள் யாரின் கடவுளாக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட,  ஓரங்கட்டப்பட்ட குடியானவனின் கடவுளா? அல்லது உயர்தர, மேல்தட்டு வர்க்கத்தினரின் கடவுளா?

அரசன் மேல்தட்டு வர்க்கத்தினருக்கானவனாக இருக்கும்பட்சத்தில் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் தனகானதைக் கேட்டுப் பெறுவது அரசுக்கு எதிரான செயல்பாடா அல்லது அது அவர்களின் உரிமை மீட்பா? 

இந்த உரிமைகோரலின் கழுத்தைப் பிடித்து நிறுத்தவே நீ வந்திருக்கிறாய் என்பதை எப்படி உனக்குப் புரிய வைப்பேன். சொல்...இதை ஒடுக்கத்தான் நீ வந்திருக்கிறாயா?

இராஜேந்திரனுக்கு எங்கோ ஒரு ஓரத்தில் நெருட ஆரம்பித்தது.  அரசு மக்களுக்கான அரசாக இருக்கிறதா? அவ்வாறு மக்களுக்கான அரசாக இருக்கவேண்டித் தானே அத்தனை உள்ளாட்சி முறைமைகளையும், மக்களே தங்கள் கிராமங்களை நிர்வகித்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் எந்நாட்டிலும் இல்லாத வகையில் சோழ நாட்டில் நிர்மாணித்தோம்.

இருந்தும், நாட்டின் மற்றும் நிர்வாகத்தின் மீதான அவனுடைய அதீத நம்பிக்கையும் அதனுடன் கூடிய தன்மானமும் அவளை விடுவதாய் இல்லை.  கடைசியில் எல்லா ஆண்களையும் போல் அவனும் வெகு இயல்பாய்ஆண்” என்கிற கவசத்தைக் கையில் எடுத்துக்கொண்டான்.

அரசின் பிரதானிகள், அரசின் அடுக்குகளில் இருந்து கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத பொறுப்பும் அக்கறையும் ஒரு பெண்ணான உனக்கு மட்டும் எப்படி? ஆடல் மகளிருக்கான இலட்சணங்களும் பொறுப்புகளும் இதுவல்லவே?

நீ சொல்வது சரிதான் இராஜேந்திரா.  நீ கடைசியில் இந்த ஆயுதத்தைத் தான் எடுப்பாய் என எனக்குத் தெரியும்.

சரி நீ சொன்னபடியே, ஒரு ஆடல் மகளிராக நான் பேசட்டுமா? சோழ நாட்டில் கோயில்கள் எதற்குக் கட்டப்பட்டிருக்கின்றன?

கோவில்கள் ஊர்ப்பஞ்சாயத்து கூடும் இடங்களாகவும், நீதி வழங்கும் நீதி மன்றங்களாகவும் செயல்படுவதற்காக எனச் சொல்லுகிறீர்கள். ஆனால், பொதுமக்களுக்கும் சமுதாயத்தின் பல்வேறு நிலையில் இருப்போருக்கும் கடவுள் பற்றிச் சொல்லி அவர் தொடர்பான நம்பிக்கையை விரிவுபடுத்துவதும் அவற்றிற்கு ஏற்பாகக் கோவில் அமைப்பதும் கோவில்களைப் பெருக்குவதும் அரசின் ஆன்மீகத் தேவையாக மட்டுமின்றி அரசியல் தேவையாகவும் தானே அதைப் பார்த்தீர்கள். இதோ! கோவில்கள் பிரகாரம் பிரகாரமாய் கட்டப்பட்டுள்ளன. கடவுளைக் காப்பாற்றுவதற்காக என்பதற்காகவும் போர்க்காலத்தில் உங்களுக்குப் பாதுகாப்புத்தரும் இடங்களாகவும் கோட்டைகளாகவும் மட்டும் அல்லவா கோவில்கள் திகழ்கின்றன. கோவில் பாதிக்கப்படக்கூடாது, கோவில் சொத்து திருடப்படக்கூடாது, கோவில் நகைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்னும் அறங்கள் பொதுமக்களிடையே சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டுள்ளன - எதற்காக?  இந்த ஒரு விசயத்திலேயே உங்களின் இராசதந்திர ஆட்சிமுறை கோவில் அமைப்பில் அடங்கியுள்ளது எனத் தெற்றெனத் தெளிவாகின்றது இல்லையா?

இதற்கு மாற்றாக நாட்டின் கருவூலங்கள், சபைக் கூடங்கள், கல்விச் சாலைகள், மருத்துவமனைகள், கடன் தரும் வங்கிகள், வேலை தரும் அமைப்புகள் போன்று வெவ்வேறு பயன்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு கோவில்கள் திகழ்ந்தால் எப்படி இருக்கும் என நான் கேட்கிறேன். கோவில்கள் அரசு நிறுவனங்களாக மாறும்போதே வெறும் வழிபாட்டுத் தலம் என்பது அடிபட்டுப் போகின்றது இல்லையா?

வெறும் ஆடல் அரங்கமாக நான் கோவிலைப் பார்க்கவில்லை.  அதற்கு மேலானதாக அதை நான் பார்க்கிறேன்.

இராஜேந்திரன் அவளைப் பார்த்தான். எத்தனைத் தெளிவு அவளிடம்?  அவள் இவன் முன் இங்கும் அங்கும் நடந்தவாறு பேசிக்கொண்டிருந்தாள். அவளின் அறிவும் அழகும் அதற்கு மேலான சமூகச்சிந்தனையும் அவனை அவளிடம் நிலைநிறுத்தியிருந்தன.

அவள் அதைக் கவனித்திருந்தாள். போதும் இராஜேந்திரா....

உன் மக்களின் ஏற்றத்தில் உன்னை நிலைநிறுத்திக்கொள். அவள் தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.  அவளின் பேச்சு அவனைப் புடமிடப்பட்டத் தங்கம் என மாற்றியிருந்தது.

காட்டாற்றின் நடுவே எந்தவொரு அசாத்தியமும் இல்லாமல் வெகு எளிதாய், இயல்பாய் நீந்தித்திரியும் அயிரை மீன் குஞ்சென அவள் தெரிந்தாள்.


பகுதி 6

காதல் காண்டம்


இடம்: ஆரூர், பரவை நாச்சியாரின் ஆடல் அரங்கு

காலம்: கிபி.1018 மார்கழி திருவாதிரை

 

இராஜேந்திரன் ஆவலுடன் காத்திருக்கப் பரவை நாச்சியார் அரங்கம் ஏறினாள். சோழரின் காவல் தெய்வம் நிசம்பசூதனியின் சிவந்தமேனியலாய், இடையும் நடையும் கம்பீரத்துடன் அசைந்திட, அரங்கத்தின் நடுப்பகுதிக்கு வந்தவளின் கண்கள் மட்டும் நிதானமின்றி தவித்திருந்தன.

 

நேற்று என்னிடம் பேசிய பரவையா இவள்? 'பரவை' என்று அவனையுமறியாமல் அவள் பெயரை இராஜேந்திரனின் உதடுகள் உச்சரித்தன. உச்சரித்த கணத்தில் தன்னை மறந்த கற்சிற்பமொன்று சுயவுணர்வு பெற்றுத் திரும்புவதைப் போல மெல்லத் திடுக்கிட்டுத் திரும்பினாள். அங்கே இராஜேந்திரன் அமர்ந்திருந்தான்.


உறுதியான பார்வை, தெளிந்த நெற்றியில் வரிவரியாய் திருநீற்றின் கோடுகள், அகன்ற மார்பில் திருநூல் படிந்திருக்க, புன்முறுவலின் இருமாப்பில் அமர்ந்திருந்தான் இராஜேந்திரன். அவள் உறுதியை சிறுகச்சிறுக வென்றுவிடுவதயாய் இருந்தது அவனின் பார்வை.


ஆடல் தொடங்கியது. பைரவி இராகத்தில் ஆரூரின் தியாக விடங்கரை நோக்கிப் பக்தை பாடும் பாடலாக அமைந்திருந்த பாடல் அது.


'உன் அழகிய திருமுகத்தை மட்டுமே எனக்குத்  தரிசனம் தருகிறாய் உன் பொன்னிற திருமேனியை முழுவதுமாய் நான் காணமுடியாதபடி மறைத்திருக்கும் மூடுமந்திரம் ஏதய்யா? அவ்வாறு நான் காணமுடியாததன் காரணம் நான் ஏழை என்பதாலா அல்லது வேதங்கள் எனக்குத் தெரியாது என்பதாலா?


இந்த உலகமே வியந்து பாடுகிற உன் அழகியத் திருமேனியில் ஊனம் ஏதேனும் இருக்கிறதா? அதை என்னிடமிருந்து நீ மறைத்துக்கொள்ளும் பொருட்டுதான் உன் திருமேனியின் தரிசனத்தை எனக்கு மறுக்கிறாயா?


உன் திருமேனியின் அழகை இங்கொன்றும் அங்கொன்றுமாக மட்டுமே நீ எனக்குக் காண்பிக்கிறாய்.


மாலை வேளையில் உன் முழுமையும் தரிசிக்க நான் வரும்பொழுது எனக்கும் உனக்குமிடையில் நிறையபேர் இருக்கின்றனர். என்னால் உன் காதணியை மட்டுமே காணமுடிகிறது. உன் கரங்களைக் கூட முழுமையாகத் தரிசித்துவிட முடிவதில்ல, அவைகளும் கூட ஒன்றையொன்றை மறைத்துக்கொண்டிருக்கின்றன.

 

வளைந்து நெளிந்து உன் திருமேனியைப் பார்த்துவிட முயலுகிறேன். ஆனால் உன் திருமேனியைச் சுற்றியிருக்கும் பாம்பினிடையே நீ மறைந்துகொள்கிறாய். இறுதியாக எனக்குக் காணக்கிடைப்பது உன் ஒற்றை பாதம் மட்டுமே.

 

இப்படியாகச் செல்கின்றன அவள் நடனமாடிய பின்வரும் பாடலின் வரிகள்.


பல்லவி

முகத்தைக் காட்டியே தேகம் முழுமையும்

காட்டாத மூடுமந்திரம் ஏதய்யா               (முகத்தை)


அனுபல்லவி

ஜகத்தில் அதிகமான ஆரூரில் வாசரே 

செழித்த மேனியில் ஊனம் உண்டோ தியாகேசரே?    (முகத்தை)

 

சரணம் 1:

சாயரட்சையில் வந்து சலிக்கப் பார்ப்போம் என்றால்

சாந்தணிந்த செவ்வந்தி தோட்டைக் காட்டி மயக்கி

மாயாவித்தனமுள்ள மந்தஹாசத்துடனே

மான்மழுவேந்திய கரத்தைக் கூட மறைத்து     (முகத்தை)

 

சரணம்2:

கூத்தாடும் போதங்கே குனிந்து பார்ப்போம் என்றால்

குதித்து குதித்து முன்பின் ஓடும் விதத்தை உற்றுப்

பார்த்தால் பசிகள் தீரும் பரவசமாகச் செய்யும் பணியால்

மறைத்துக் கொண்டொரு பாதம் காட்டுவதல்லாமல்       (முகத்தை)

 

சரணம்3:

அபிஷேகக் காலத்தில் அருமைத் திருமேனியை

அதி ரகசியமான தோட்டால் மறைக்கிறீர்

விபவம் தந்து ரக்ஷிக்கும் திவ்ய மங்கள ரூப

விடங்க தியாகராஜரே பாபவிநாசரே                     (முகத்தை)

 

ஆடல் முடிந்தது. இராஜேந்திரன் இருக்கையிலிருந்து எழமனமில்லாமல் அமர்ந்திருந்தான். இப்பாடலை ஏன் பரவை இங்கு அரங்கேற்றியிருக்கிறாள் என்பது பிடிபடாமல் அமைதியற்றவனாய் இருக்கையை இறுக்கமாக அவன் பற்றியிருந்தவிதம் அவனின் முறுக்கேறிய புஜங்களிலும் புடைத்திருந்த கழுத்து நரம்புகளிலும் தெரிந்தது.

உடனடியாக பரவையை பார்த்தாகிடவேண்டும். இப்போதே அவளை நான் சந்தித்தாகவேண்டும். தேரில் பூட்டியிருந்த புரவிகளை ஆரூர் வீதிகளின் வழியே விரட்டினான். அசுரவேகத்தில் அவனின் புரவிகள் புழுதியுடன் பறந்தன. வெகு சீக்கிரத்தில் பரவையின் இல்லத்திலிருந்தான் இராஜேந்திரன். ஆனால், பரவையிடத்தில் எந்த ஒரு சலனமுமில்லை. அவள் அவன் வருகையை எதிர்பார்த்து ருவித தீர்க்கத்துடன் காத்திருந்தாள்.

அன்று தன் இல்லத்தில் அவனுடன் உறுதியாய் உரையாடியதின் தொடர்ச்சியாய், அவனைத் தஞ்சைக்கு புதிய மனிதனாய் அனுப்புவதற்காய் அவள் காத்திருந்தாள்.

 அவனுக்காய்  தாமரை இலையின் தண்ணீர்த்துளிகளாய் வாழ காத்திருந்தாள்.


முற்றும்.